அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, February 23, 2023

ஈச்சங்காடு இந்து மயானப் புனரமைப்பு


பாரெங்கும் பரந்து வாழும் பாசம் மிக்க உசன் உறவுகளே!
உங்கள் அனைவரினதும் உத்வேகத்தில் உதித்த உசன் பவுண்டேசனானது தனது முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்திட்டமான ஈச்சங்காடு இந்து மயான புனரமைப்புப் பணியை நிறைவுசெய்துள்ளது. இச் செயற்திட்டத்தினால் மயானத்தின் தகனபீடம் அடங்கிய எரிகொட்டகையைச் சுற்றி காப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மண் அணைத்து உயரமாக்கப்பட்டு, வெள்ள நீர் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர தீர்வு பெறப்பட்டுள்ளது. அத்துடன் இப் பிரதேசத்தில் நிழல்தரு மரங்கள் நாட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இது ஒரு பச்சையீட்டுச் செயற்திட்டமாக மிகச் சிறப்பாக அந்தச் சூழலுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச் செயற்திட்டமானது மக்கள் மயப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தோராய மதிப்பீடாக ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் எதிர்பார்க்கப்பட்டது. எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி, பொருட்கள், சேவைகளின் கட்டுக்கடங்காத பெறுமதியுயர்வு, பணவீக்கம் முதலான காரணங்களால் எமது தோராய மதிப்பீட்டினைத் தாண்டிய நிலையில் 1,172,801.00 ரூபா செலவீனம் ஏற்பட்டிருந்தது.
இச் செயற்திட்டத்திற்கான உள்ளுர்வாழ் உசன் உறவுகளது பங்களிப்பாக 672,050.00 ரூபா கிடைக்கப்பெற்றதுடன், தன்னார்வமாக புலம்பெயர் தேசத்து உறவுகள் மூவரது பங்களிப்பு 300,186.00 ரூபா இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.


நிதிப் பங்களிப்பானது தனியாக இச் செயற்திட்டத்தின் சரியான செலவீனத்தினை ஈடுசெய்வதற்காக மாத்திரமே மேற்கொள்வது எனவும், இதற்காகச் சேகரிக்கப்படும் நிதியை வேறு தேவைகளுக்குப் பாவிப்பதில்லை என்ற கொள்கைரீதியான தீர்மானத்தின் அடிப்படையிலும் தொடரப்பட்டது.
முதலில் உள்ளுர் மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது எனவும், இச் செயற்பாட்டில் உள்ளுர் மக்களது பங்கேற்பு “எமது” என்ற சிந்தனையை வலுவாக்கும் என்பதை அழுத்துவதாகவே அமைந்திருந்தது. இச் செயற்பாடு பெரு வெற்றியை எமக்கு அளித்திருக்கின்றது. எதிர்பார்க்காதவகையில் சிறப்பான பங்களிப்புடன் ஒரு தொகை உள்ளுரில் கிடைத்திருந்தது. தவிர தன்னார்வமாக இச் செயற்திட்ட பிரேரிப்பினை அறிந்தவர்களாக பொது வெளியில் நிதி திரட்டுகை ஆரம்பிக்கப்படாத நிலையில் மூவரது பங்களிப்புக்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றினை திரட்டியதன் அடிப்படையில் 200,565.00 ரூபா இன்னமும் திரட்டவேண்டிய நிலையில் எமது நிர்வாக குழு செயற்திட்ட நிறைவுச் செய்தியுடன் நிதிக் கோரிக்கையையும் பொது வெளியில் முன்வைக்கின்றது.


திரட்டப்படவேண்டிய தொகை 200,565.00 இலங்கை ரூபாக்கள்.
இத் தொகை மாத்திரமே இச் செயற்திட்டம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இதனைப் பங்களிக்க விரும்பும் நல் உள்ளங்கள் கீழ்வரும் எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்களது விபரங்களை எமது usanfoundation@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கவும்.
Account name: Usan foundation society Limited
Bank: Nations Trust Bank
Branch: Jaffna Branch
Swift Code: NTBCLKLX
Account number: 200350097907


மேலும் இம் மயானத்தினை எமது கிராமத்தினை விடவும் தவசிகுளம் ஒருபகுதி, கெற்பேலி மற்றும் பாலாவியின் ஒரு பகுதி அயல் கிராமங்களும் பயன்படுத்துவதால் அவ் விடத்தினைப் பராமரிப்பு செய்வதில் பொது நிலைப்பாட்டினை உருவாக்குவதற்கான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் மயானம் எமது கிராமத்தின் பௌதீக எல்லைக்குள் அமைந்திருப்பதால் அதற்கான உரிமைத்தத்துவமும், தங்குதடையற்ற ஆட்சியும் எமது கிராம மக்களிடம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் மேற்குறித்த பயனர்களிடம் இருந்து எவ்வித பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் இச்செயற்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவீனப்பொழிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரதும் ஒத்துழைப்புக்கு உசன் பவுண்டேசன் சார்பாக மிக்க நன்றிகள்.
நிர்வாகக் குழு
USAN Foundation







Wednesday, February 22, 2023

உசனோடு ஒன்றாவோம்!

ஊரோடு உறாவாடும் அனைத்து உசன் வாழ் உறவுகளுக்கும் அன்பு நிறைந்த வணக்கம்!

உசன் மண்ணிலும், உசனைத்தாண்டி வெளியூர்களில் வாழ்கின்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகளை ஒன்றிணைத்து உசனின் வளர்ச்சிக்கு என்று ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட USAN Foundation முதன்முறையாக அனைவரையும் ஒருங்கிணைத்து இணையவழியில் ஒரு கலைநிகழ்வினை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. 

இப்படியான இணையவழி நிகழ்வொன்றை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த மூன்றுவருடங்களுக்கு முன் நடாத்தியது பலர் அறிந்தவிடையம். உண்மையில் அதில்  பலர் கலந்துகொண்டாலும் இன்னும் பலருக்கு பலத்த ஏமாற்றமாகத்தான் பின்நாட்களில் உரையாடுகின்றபோது கவலைப்பட்டார்கள். எனக்குத்தெரியாமல் போய்விட்டது என்றும், அன்றையதினம் வேலையில் விடுமுறை எடுக்கமுடியாமல் போனதென்றும் மிகவும் ஆவலாக ஆதங்கப்பட்டார்கள்.

அதனால் இத்தகையசந்தர்பத்தைத் தவறவிடாமல் உங்களுக்குத்தெரிந்த எமது உறவுகளைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு எப்படி இதில் கலந்துகொள்ளலாம் என்பதைக் கணினியில் காட்டிக்கொடுத்துக் கூட்டிவாருங்கள். 

இன்றும் எமது முதியோருக்கு இப்படியான சந்தர்பங்களில் பங்குகொள்ள ஆவல் இருந்தும் நடைமுறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன.  அவற்றை அவர்களின் பேரப்பிள்ளைகளின் உதவியோடு கைகோர்த்துக் கூட்டிவாருங்கள்.

மேலும் இத்தகைய இணையவழியானது இரண்டாவது சந்தர்பம். இதை நழுவவிடாதீர்கள். வாருங்கள், வாருங்கள் உங்கள் முகங்களையும், உங்கள் ஆக்கங்களையும், உங்கள் பிள்ளைகளின் ஊக்கங்களில் உருவான கலை வடிவங்களையும் குறைந்தநேரத்தில் செயல்படுத்தும் வகையில் கொண்டுவாருங்கள்.

இந் நிகழ்வானது எதிர்வரும் 11.03.2023 அன்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந் நிகழ்வுகள் அனைத்தும் இரண்டு மணி நேரங்களுக்குள் மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

கலை நிகழ்ச்சிகள் வழங்க ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சல்களுக்குத் தங்களது விபரங்களை 28.02.2023 க்கு முன்னர் அனுப்பிவைத்து ஒத்துழைக்கும் வண்ணம் தயவுடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள். 

usanfoundation@gmail.com
secretary@usan.ca

நிகழ்ச்சிகளை வழங்க எதிர்பார்ப்பவர்கள் பின்வரும் சில விடயங்களில் கவனத்தினை செலுத்தி ஒருங்கிணைப்பு, செயன்முறை ஒழுங்குகளுக்கு ஒத்துழைக்கும் வண்ணம் பணிவாக வேண்டப்படுகின்றீர்கள். 

1. தனி அல்லது குழு நிகழ்வுகளின் நேர அளவு 4 நிமிடங்களுக்குள் அடங்குவாதாக இருத்தல் வேண்டும். 

2. ஆயத்த நடவடிக்கைகள், காணொளிப் பகிர்வின் தரம் முதலியவற்றின் தரச்சிறப்பு தொடர்பில், நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அனுப்பிவைக்கப்படுவது சிறந்ததாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

3. நேர முகாமைத்துவத்தினை கருத்திற்கொண்டு மிகவும் நேர்த்தியான நிகழ்ச்சி நிரலினைத் தயாரிக்க எதிர்பார்ப்பதால், நிகழ்வுகள் கிடைக்கப்பெறும் ஒழுங்கிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அமைவாக இயன்றவரை தாமதமின்றி நிகழ்வுகளை அனுப்பிவைத்து அந் நிகழ்ச்சிகள் உள்வாங்கப்படுவதற்கு ஒத்துழைக்கவும்.
 
4. தாமதமாக மற்றும் அதிகரித்த எண்ணிக்கையான நிகழ்வுகள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் நிகழ்வுகளின் எண்ணிக்கையை வரையறுக்கவேண்டிய நிலை உருவாகலாம். 

ஆவலுடன் காத்திருக்கின்றோம்.  தங்கள் அத்தனைபேரினதும் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

இத்தகையசந்தர்ப்பத்தில்தான் நாம் எமது உறவுகளைச் சந்திப்பதோடு எமது ஊரின் கட்டுமாணங்களையும், அதற்கான தேவைகளையும், அதன் இன்றைய வளர்சியையும், நாளைய தேவைகளை எப்படி ஈடுசெய்து கொள்ளலாம் என்பதையும் எங்களுக்குள் மனம் திறந்து உரையாடிக்கொள்ள முடியும்.

வாருங்கள், வாருங்கள் வாருங்கள்…....

நன்றி.

நிர்வாகக் குழு 
USAN Foundation