அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, January 29, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
Usan Global Forum
அங்குரார்ப்பண நிகழ்வு

உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உருவாக்கம் சம்பந்தமாக Zoom செயலி வழியாக January 22, 2022, சனிக்கிழமை முதலாவது கூட்டம் உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற உசன் உறவுகளோடு இணையவழியூடாக இடம்பெற்றது.

இதையடுத்து இக்கூட்டத்தில் அடுத்த 31.01.2022 முன்பாக இந்தகட்டமைப்பிற்கான யாப்பை முழுமையடைய வைப்பதற்கான ஒரு குழுவை முன்மொழிந்தோம். அதன்படி அவர்களால் யாப்பானது முழுமையடைந்துள்ளது.  இதனடிப்படையில் "உலகளாவிய உசன் கட்டமைப்பு (Usan Global Forum)" அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 30.01.2022 கனடா நேரம் காலை 7:00 மணி, இலங்கை நேரம் மாலை 5:30, ஐரோப்பிய நேரம் பகல் 1 மணி, இலண்டன் மதியம் 12 மணி, அவுஸ்ரேலியா இரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை எமது உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Zoom செயலி இணைப்பு விபரம்
Meeting ID: 856 3853 6536
Passcode: usan
https://us02web.zoom.us/j/85638536536?pwd=aTRLam9HbERyb2V2TzNvRnptbXlKQT09

நிகழ்ச்சி நிரலும் தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறீர்கள்.

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றி கொள்வோம்!

நன்றி.

ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு


Sunday, January 23, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
Usan Global Forum

November 6 ஆம் திகதி இடம்பெற்ற "உசன் ஒருங்கிணையம்" Zoom செயலி வழி ஒன்றுகூடலில் முன்வைக்கப்பட்ட உசன் முன்னேற்றத்துக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு என்ற கருப்பொருளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.  January 22, 2022, சனிக்கிழமை கனடா நேரம் காலை 7 மணியளவில் உசனுக்கான பொதுக்கட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் ஏற்கனவே அறிவித்தபடி உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற உசன் உறவுகளோடு இணையவழியூடாக இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே "உலகளாவிய உசன் கட்டமைப்பு" (Usan Global Forum) என்ற இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதலாவதாக அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து திரு. பாஸ்கரன் ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுக் கொண்டார். மேலும் பொதுக்கட்டமைப்புத் தொடர்பாக இதுவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நோர்வேயில் இருந்து திரு. ஜெயதேவன் இந்த உசன் பொதுக்கட்டமைப்பின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் என்பது பற்றிய சிறு விளக்கத்தை அளித்தார்.

இதுவரைகாலமும் திரு. பாஸ்கரன் அவர்களுக்கும் உசன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. ஜதுசன் அவர்களுக்குமிடையே இந்தக் கட்டமைப்புத் தொடர்பாக இருந்துவந்த தொடர்பாடல்கள் பற்றிய விபரங்கள் பரிமாற்றப்பட்டதோடு திரு. ஜதுசன் மற்றும் ஊரின் பற்றாளர்களின் உறுதுணையோடு ஊரில் இருக்கின்ற ஏனைய அமைப்புகளையும் இந்தப் பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தோடு கூட்டமானது தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து திரு. ஜதுசன் அவர்களால் வரையப்பட்ட மாதிரி யாப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் சாரங்கள் ஆராயப்பட்டன. இந்த ஆவணங்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது மேலதிகமாகச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய சரத்துகள் பற்றிய ஆலோசனை, கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடம் கேட்கப்பட்டது.  இந்த ஆலோசனைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களைச் செய்து மேம்படுத்தப்பட்ட மாதிரி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக உப குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது.  திருவாளர்கள் ஜதுசன் (இலங்கை), ஜெகன் (பிரித்தானியா) மற்றும் ஜெயதேவன் (நோர்வே) ஆகியோரே இந்த உப குழுவின் அங்கத்தினராவார்கள்.  மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் என்பவற்றை வருகின்ற January 29, 2022 க்குள் சமர்பிக்கவேண்டுமெனச் சபையோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஆவணங்களை உப குழு சபையின் முவைத்து ஒப்புதல் பெறப்படும்.

அடுத்து, உசனுக்கான பொதுக்கட்டமைப்பின் தொடர்பாளராக திரு. ஜதுசன் அவர்களை திரு. பாஸ்கரன் முன்மொழிய, அதை திரு. ஜெயதேவன் அவர்கள் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.

அடுத்து பிரித்தானியாவில் இருந்து திரு. ஜெகன் அவர்கள் இந்தக் கட்டமைப்பின் நிதி சம்பந்தமாகவும் செயற்பாட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடர்பாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார்.  நிதி சேகரிப்பு நடவடிக்கையொன்றை சரியான நேரத்தில் செய்து வரும் நிதியை இலங்கையில் நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்து அதிலிருந்து வரும் வட்டியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது சிறந்தெதென்று திரு. ஜெகன் கருத்துத் தெரிவித்தார்.
 
இதில் இருக்கின்ற நடைமுறைச்சிக்கல்கள் தொடர்பாக தேவன் அவர்களால் முவைக்கப்பட்ட கேள்விக்கு விடை தேடும் வகையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சிவசரவணபவன் (சிற்பி) அவர்களின் மகன் சுந்தேரேஸ்வரன் அவர்களிடம் ஆலோசனை பெறுவதென்றும் அதனை திரு. ஜதுசன் முன்னெடுப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது.  திரு. சுந்தரேசன் வங்கித் துறையில் உயர் பதவி வகிப்பவர் என்பதோடு உசன் மண்மேல் அக்கறை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் சேர்க்கப்படும் நிதியை முதலீடு செய்து தொழில் ஒன்றை ஆரம்பித்து அதிலிருந்து வரும் இலாபத்தை உசன் அபிவிருத்திக்குப் பாவிக்கலாம் என்ற கருத்தை திரு. ஜெயதேவன் முன்வைத்தார்.  இதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் இது குறித்து உரிய நேரத்தில் கலந்துரையாடலாம் என்று முடிவுசெய்யப்பட்டது.

சேகரிக்கும் பணத்தைத் தற்காலிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  தனியான வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடலாம் என்ற கருத்தை திரு. தயாபரன் முன்வைத்தார். அதைச் சபையும் ஏற்றுக்கொண்டது.  கனடாவில் வைப்பிலிடுவதால் வட்டிப் பணம் கிடைக்காது என்ற யதார்த்தமும் கருத்திலெடுக்கப்பட்டது.

அடுத்து ஒவ்வொரு நாட்டுக்கான பிரதிநிதிகள் தெரிவில் ஏற்கனவே பதிவாகிய நாடுகளைத் தாண்டி மிகுதியான நாடுகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் சபையால் முன்மொழியப்பட்டது. இவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை உள்வாங்கும் பொறுப்பு திரு,தயாபரன் மற்றும் திரு. ஜெயதேவன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து இப்பொதுக்கட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளராக திரு. ஜெயதேவன் அவர்களைச் சபை ஏகமனதாகச் தெரிவுசெய்தது.  பொதுக்கட்டமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை நிர்வாகத்தின் ஒப்புதலோடு பொதுத்தளங்களில் வெளிக்கொண்டுவருவதுடன் விளக்கங்கள் கொடுப்பதும் பேச்சாளரின் கடமையாக இருக்கும்.

அடுத்து இப்பொதுக்கட்டமைப்பின் கன்னிமுயற்சியாகச் செய்யக்கூடிய வேலைத் திட்டம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே எண்ணக்கருவிலிருந்த உசன் கட்டுவரம்பு பாதையைச் செப்பனிட்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்வது சாத்தியமா என்று ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதை எப்படியான வழிமுறையில் செய்துகொள்ளலாம் என்ற கருத்தை திரு. ஜெகன் அவர்கள் அளித்தார்.  இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு திரு. ஜதுசன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து சபையோர் கருத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரம் கருத்து கூறுகையில் திரு. சிவானந்தம் அண்ணா அவர்கள் கட்டுவரம்பைச் சீர்செய்கின்றபொது அங்குவைக்கின்ற மரங்களுக்கான நீர் வழங்கல் தேவைகளையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொண்டதோடு அவரது உள்ளக்கிடங்கில் இருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனதாரப்பாராட்டியதோடு வாழ்துரைத்தார். திரு. ஜெபநாமகணேசனும் இந்தப் பொதுக் கட்டமைப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறதென்றும், இதன் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டுமென்றும் கூறி வாழ்த்தினார்.

இறுதியாக ஆர்வத்தோடு கலந்துகொண்டு பங்களிப்பாற்றிய அனைவருக்கும் திரு. பாஸ்கரன் நன்றி கூறினார்.

இந்தப் பொதுக்கட்டமைப்பின் செயற்பாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 40 வயது முதல் 60 வயது வரையானோர் மற்றும் 40 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் என்ற மூன்று வயதுப் பிரிவினர் உள்வாங்கப்படுவதால் அவர்களின்  வளங்களையும், ஆலோசனைகளையும், செயல்திறனையும் ஒன்று சேர்ப்பதனால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உசன் மண்ணின் வளர்ச்சிக்கு, உலகளாவிய உசன் கட்டமைப்பின் (Usan Global Forum) ஊடாக மனங்களாலும், வளங்களாலும் ஒருமித்து வெற்றி காண்போம்!


Sunday, January 16, 2022

உசனுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு


November 6, 2021 இல் இடம்பெற்ற "உசன் ஒருங்கிணையம்" இணைய விழாவிலே உசன் அபிவிருத்தியை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் நோக்கில் ஒரு பொதுக் கட்டமைப்பின் அவசியம் குறித்து பிரேரணை முன்மொழியப்பட்டது.  உசனிலே இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளையும், புலத்திலே ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது ஒரு பிரதிநிதியையும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவையும் உள்ளடக்கியதாக இந்தப் பொதுக் கட்டமைப்பு அமைய வேண்டும் என்ற கருத்து அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.  அதனடிப்படையில் தற்காலிகமாக ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா, உசன் கிராம முனேற்றச் சங்கத்தோடு கடந்த இரு மாதங்களாகக் கந்தாலோசித்து வருகிறது.  இலகுவான கருத்துப் பரிமாற்றத்தினை மனதில் கொண்டு   உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கேட்டுக்கொண்டதற்கிணங்க உசன் கிராம முனேற்றச் சங்கம் உசனிலே இயங்கும் ஏனைய அமைப்புகளோடு இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறது.  அது நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்.

ஆனாலும் நாட்டுக்கொரு பிரதிநியைத் தெரிவுசெய்வதில் காலதாமதம் நிலவுகிறது.  இதனை விரைவுபடுத்தும் நோக்கிலும், இதுவரை ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பகிர்ந்துகொள்ளவும், இந்தப் பொதுக் கட்டமைப்பு எவ்வாறு இயங்கவேண்டும் என்று மேலதிகமாகக் கலந்துரையாடவும் Zoom செயலியூடாகக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உசனிலிருந்து இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளையும், உலகெங்கும் வாழும் உசன் மண்மேல் காதல் கொண்ட நல்லுள்ளங்களையும் கலந்துகொண்டு வளம்மிக்க ஆலோசனைகளை வழங்குவதோடு இந்தப் பொதுக் கட்டமைப்பில் தாமாகவே அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஆக்கப் பணிகளில் ஈடுபட உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

திகதி: சனிக்கிழமை, January 22, 2022
நேரம்: காலை 7 மணி EST (Toronto) ; மதியம் 12 மணி GMT (UK), பிற்பகல் 1 மணி CET (France, Germany, Italy, Switzerland, Norway, Denmark, etc.), மாலை 5:30 மணி IST (Sri Lanka), இரவு 11 மணி AEDT (Sydney & Melbourne, Australia)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83645916661?pwd=UHhyNnd5elBLMlFNOTk2MXhFQURhZz09

Meeting ID: 836 4591 6661
Passcode: usan

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


அமரர் புஸ்பராணி கந்தையா



உசனைச் சேர்ந்த திருமதி புஸ்பராணி கந்தையா (பூவா) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி (குலசேகரம்) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சுதர்சினி (மிருசுவில்), சுதர்சன் (France), சுபாசினி (வவுனியா), சுபாசன் (விசுவமடு), காலஞ்சென்றவர்களான சுகிர்தன், சுகிர்தினி, மற்றும் கண்ணன் (France) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் (குணம்),  வசந்தராணி (வசந்தா), இராஜகுலசிங்கம் (பபா), மற்றும் இரத்தினசிங்கம் (ராசன், ஓய்வுநிலை தபால் திணைக்கள உத்தியோகத்தர், கொழும்பு), பத்மராணி (பபி, மீசாலை), பூபாலசிங்கம் (ஆனந்தன், ஐக்கிய இராச்சியம்), தனபாலசிங்கம் (தனம், கிராமசேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்து நிற்கிறது.