அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, December 21, 2015

அமரர் இராஜேஸ்வரி ஜெயரூபன்

வந்தோரை வரவேற்கும் உசன் கிராமத்தில் நல்லப்பா பரம்பரையில் உதித்திட்ட, தென் மாகாணப் பிரபல வர்த்தகர் மாணிக்கம் ஜெயலட்சுமி தம்பதிகளுக்கு மலர்ந்திட்ட முத்துக்கள் தெய்வானைப்பிள்ளை சுந்தரலிங்கம், செல்வநாயகி சந்திரசேகரம், சண்முகநாதன் ராகினி, சிவானந்தசோதி மாலதி, ஜெகசோதி மாலதி, இராஜேஸ்வரி ஜெயருபன், ஜெகநாதன் கமலாதேவி, சிவபாலன் சுனேந்திரா ஆகியோர்.

இவர்களில் தங்கத்தில் தங்கமாக ஜொலித்தார் இராஜேஸ்வரி. இவர் "ஈசு" என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்டார். 09.03.1957 அன்று இராஜேஸ்வரி இவ்வுலகில் விடிவெள்ளியாக உதித்திட்டார்.

'விளையும் பயிரை முளையில் தெரியும்' என்ற பழமொழிக்கு அமைய கல்வி, கலை, ஒழுக்கம், குடும்ப கௌரவம் இதையெல்லாம் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்று சிறந்த ஒரு மேதாவியாகத் திகழ்ந்தார்.

முத்துத்தம்பி பெற்றெடுத்த முத்தான ஜெயருபனை பெரியோர்கள் நிச்சயிக்கத் திருமணம் புரிந்தார். அக்குடும்பத்துக்கு ஆண்டவன் அருளால் இரண்டு மாணிக்கங்களைப் பெற்றெடுத்தார். ஆண் வாரிசாக கௌரிபாலனையும் (பாலன்), பெண் வாரிசாக சிந்துஜாவையும் (சிந்து) பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றெடுத்தார். இரு பிள்ளைச் செல்வங்களையும் கண்மணிபோல் காத்து அவர்களுக்கு உணவூட்டும்போது கல்வி, அன்பு, பண்பு இவற்றையும் சேர்த்து ஊட்டினார். தனது சகோதரர்களை தாயாகவும், குருவாகவும் குடும்பமாக ஒரே குடைக்குக் கீழே வைத்திருந்தார்.

தனது மருமகனாகவும், மகனாகவும் தேவகுமார் என்பவரையும், மருமகளாக அனுசுயாவையும் கடவுள் அருளால் கிடைக்கப்பெற்றார். தனது சந்ததிக்கு அன்பு மகனான கௌரிபாலனுக்கு சஷ்மிகாவையும், டில்சியாவையும், அன்பு மகளான சிந்துஜாவுக்கு வைஷவி, வைசிகா, விபூஷாவையும் பேரப் பிள்ளைகளாகக் கிடைக்கப்பெற்றார்.

தன்னை நாடிவருபவர்களுக்கு உணவளித்து, அன்புடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தான் வாழ்ந்திட்ட பாரிஸ் - உசன் மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தார்.

பூவுலகில் எல்லாக் கடமைகளையும் செவ்வனே செய்து, 3 ஆம் திகதி மார்கழி மாதம் 2015 ஆம் ஆண்டு இரவு 9:30 மணியளவில் இறைவனடி சேர்ந்த தனது தகப்பனார், தாயாரோடு தானும் இறைவன் திருவடி சேர்ந்தார்.

உங்கள் பிரிவால் வாடும், மகன், மகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனிமார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.

உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம். பூமியில் மறுபடி பிறந்து சூரிய ஒளிபோல் ஒளிரவேண்டுமேன்று ஆண்டவனை வேண்டுகின்றோம்.

எங்கள் தாயாரின் பிரிவால் தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் கூறியவர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்".
தகவல்:
ஜெகசோதி (சோதி, சுவிஸ்) - +41 62 293 2716


Sunday, December 20, 2015

உசன் உறவுகள் 2015

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் "உசன் உறவுகள் 2015" நிகழ்வு எதிர்வரும் January மதம், 16 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு, சனிக்கிழமை இடம்பெற உள்ளது. Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உறுப்பினர்களையும், மற்றும் உசன் மக்களையும் ஒன்றியத்தின் நிர்வாகசபை அன்போடு அழைக்கின்றது.

இந்நிகழ்வில் நிகழ்சிகள் வழங்க விரும்புவோர் ஒன்றியத்தின் செயலாளருடன் தொடர்பு கொண்டு தகவல்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை மாதாந்த அங்கத்துவத் திட்டத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் பொருளாளரோடு தொடர்பு கொண்டு இணைந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எந்தவிதத்திலாவது இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோரும் பொருளாளரோடு தொடர்புகொள்ள முடியும்.

உசன் உறவுகள் 2015 இல் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, December 6, 2015

உசன் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு





உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் இந்த வருடம் ஐந்தாம் ஆண்டு  புலமை பரிசில்  பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சிறப்பு பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது  , வருட இறுதி மதிப்பெண் அட்டை வழங்கும் நிகழ்வில் இந்த சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது ,பாடாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
உசன் பொது நூலக நிர்வாகசபை தலைவர் ,செயலாளர் கலந்து கொண்டு இந்த பரிசிலை வழங்கினர் , தொரடர்ந்து வரும் காலங்களில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு , பெறுமதியான சிறப்பு பரில்களை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்த கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துள்ளது .
பரீடசையில் சித்தியடைந்து பரிசினை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,





Friday, December 4, 2015

புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நிக்கும் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயம்


மிருசுவில் மற்றும் அதன் சுற்றுகிராம பங்கு மக்களின் புனித தலமாக விளங்கி காத்தருள் புரியும் புனித நீக்கிலார் தேவாலயம் போரினால் பாதிப்படைந்திருந்த நிலையில் , மிருசுவில் பங்கு மக்களின் முயட்சியாலும் திருச்சபையின்  ஒத்துழைப்புடனும் , தேவாலயம் 30 மில்லியன் ருபா செலவில் புனருத்தானம் செய்யப்பட்டுள்ளது , மிருசுவில் மண்ணின் இலட்சினையாக விளங்கும் இந்த தேவாலய திருப்பணிக்கு புலம்பெயர் மிருசுவில் மக்களும் கனடா வாழ் நீக்கிலார் பங்கு மக்கள் ஒன்றியமும் பெரும் பங்களிப்பு வழங்கி இந்த திருப்பணியை நிறைவேற்றியுள்ளனர் .
புதுபொலிவுடன் காட்சியளிக்கும்  திருத்தலத்தை முன்னாள் யாழ் மறை  மாவட்ட ஆயர் வண.பிதா தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது .
இந்த திருப்பணிக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கும் , மிருசுவில் நீக்கிலார் பங்கு மக்களுக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .







Monday, November 9, 2015

உசன் அறிவியல் "சிற்பி" ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ...


உசன் பாடசாலையின் வரலாற்றில் மறக்கமுடியா   ஆசானாகவும் ,அதிபராகவும் விளங்கி உசன் கிராம மக்களின் அன்புக்குரிய ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) ஐயா அவர்கள் இன்று (09-11-2015) காலமானார்,
அன்னாரின் காலத்தில் உசன் பாடசாலையில் மாணவர்களின் கல்விவளர்ச்சி மிக அதிகமாக இருந்ததுடன் ,உசன் பாடசாலையின் கீதத்தையும் இயற்றியவர் , கிராம மக்களுடன் அன்பாக பழகியதுடன், தமிழ் மற்றும் இலக்கிய துறையில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தார் ,
சிற்பி ஐயா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சி.சிவசரவணபவன்அவர்களிடம் கல்விகற்ற மாணவர்கள் பலர் தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளனர் ,
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துகொள்வதுடன் 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்துகொள்கிறோம் . 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும்.

1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ். வைத்தீசுவரக் கல்லூரி என்பவற்றில் புகழ் பூத்த அதிபராக விளங்கினார்.
 ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், சஞ்சிகையாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர்.  பலரை இலக்கியத்துறைக்குள் ஈடுபடுத்தியவர்.
சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது.யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்த ”இந்து சாதனம்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொழிற்பட்டார்
1953 இல் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் கல்விகற்கும் வேளையில் இளந் தமிழன் என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது.
ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
சிற்பி என்ற பெயரிலேயே பல சிறுகதைகளையும் உனக்காக கண்ணே என்ற பிரபல நாவலையும் எழுதிய இவரது முழுப்பெயர் பிரம்மஸ்ரீ  சிவசுப்பிரம்மண்ய ஐயர் சிவசரவணபவன் . தாயார் சௌந்தராம்பாள் ஆவார்.
யாழ்வாசி என்ற புனை பெயரிலும் பல ஆக்கங்களை படைத்த இவர் பல விருதுகளை பெற்றவர். இவர் ஈழத்து சிறுகதை வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் எழுதி வந்தவர்.இறக்கும் போது இவருக்கு வயது 82